கர்னல் பென்னிகுயிக் மணிமண்டப திறப்பு விழாவில் தமிழக முதல்வர் கலந்து கொள்வதால் பாதுகாப்புப் பணிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முடுக்கி விட்டுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை கட்டிய கர்னல் பென்னிகுயிக் நினைவையும், அவரது தியாகத்தையும் போற்றும் வகையில், தமிழக அரசு லோயர்கேம்பில் 2.30 ஏக்கரில் 1.25 கோடி மதிப்பில் பென்னிகுயிக் மணிமண்டம் அமைத்துள்ளது.
முதல்வர் ஜெ.ஜெயலலிதா வரும் ஜனவரி 15 ஆம் தேதி பென்னிகுயிக் பிறந்த நாளில் மணிமண்டபத்தை திறந்து வைக்க உள்ளார். மணிமண்டப கட்டுமானப் பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், 3-வது முறையாக தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன்குமார் அபிநபு ஆகியோர் லோயர்கேம்பில் முகாமிட்டுள்ளனர்.
அங்கு முதல்வர் வரும்போது, செய்யப்பட உள்ள பாதுகாப்பு பணிகள், ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கும் பணிகளையும், லோயர்கேம்பில் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்டத்திற்கான இடம் ஆகியவை குறித்தும், வாகன நிறுத்தும் இடம் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
ஆய்வில், பொதுப்பணித்துறை (கட்டுமானபிரிவு) முதன்மை பொறியாளர் செல்வநாதன், மாவட்ட அதிமுக செயலாளர் டி.சிவக்குமார், உதவி பொறியாளர் சித்திரவேல், வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், வட்டாட்சியர் ஜவஹர்லால் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
முதல்வரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரி நேரில் ஆய்வு: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு காவல் கண்காணிப்பாளர் முத்துச்சாமி தலைமையிலான காவல் துறையினர் மணிமண்டபம், பொதுகூட்ட இடம், முதல்வர் செல்லும் வழி, ஹெலிகாப்டர் இறங்கும் இடம் குறித்தும், பாதுகாப்பு ஆய்வு குறித்தும் மாவட்ட காவல் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.