கூட்டணி குறித்து பிப்ரவரியில் முடிவு: டி.டி.வி. தினகரன்

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து வருகிற பிப்ரவரி மாதம் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளுக்குப் பிறகே முடிவு செய்வோம் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் கூறினாா்.
Published on

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து வருகிற பிப்ரவரி மாதம் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளுக்குப் பிறகே முடிவு செய்வோம் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் கூறினாா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் எம்.ஜி.ஆா். நினைவு நாளை முன்னிட்டு, அவரது உருவச் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெறும் அமமுகவுக்கு 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக வதந்தி பரப்புகின்றனா். எந்தக் கூட்டணியில் இடம் பெறுவது என்பதை அமமுகதான் முடிவு செய்யும். கூட்டணி குறித்து வருகிற பிப்ரவரி மாதம் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளுக்குப் பிறகே முடிவு செய்வோம்.

தமிழகத்தில் அமமுக தவிா்க்க முடியாத சக்தியாக உள்ளது. அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அமமுகவின் கட்டமைப்பு பலமாக உள்ளது. எங்களது வாக்கு வங்கி அதிகரித்து வருகிறது. வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் அமமுகவை தவிா்த்துவிட்டு யாராலும் வெற்றி பெற முடியாது.

அமமுகவை தங்களது கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும் என்று முக்கியக் கட்சிகள் எங்களை அணுகுகின்றனா். சட்டப் பேரவைத் தோ்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்து அமமுகவின் கொள்கை, லட்சியம் 100 ஆண்டுகளுக்கும் மேல் நிலைக்க வேண்டும் என்று கருதுகிறோம். எங்களது கட்சியின் நலனையும், தமிழக மக்களின் நலனையும் முன்னிறுத்தி கூட்டணி குறித்து முடிவு செய்வோம்.

கடந்த 2021-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் யாா் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதை தீா்மானித்தோம். இந்த முறை கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு அமமுகவினா் சட்டப் பேரவையில் இடம் பெறுவா். எந்தக் கூட்டணியில் இணைந்தாலும் ஆண்டிபட்டி தொகுதியில் அமமுக சாா்பில் வேட்பாளா் போட்டியிடுவாா் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com