போடி நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ - பொதுமக்கள் அவதி
போடி நகராட்சி குப்பைக் கிடங்கில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் 2 நாள்களாக தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டு வருகின்றனா். நச்சுப் புகை பரவியதால் பொதுமக்கள், விவசாயிகள் அவதிக்குள்ளாகினா்.
தேனி மாவட்டம், போடி நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகளை போடி அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட சிறைக்காடு மலை கிராமத்தில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் சேகரிக்கின்றனா்.
இந்தக் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து உரமாக மாற்றும் இயந்திரங்களும் இங்கு பொருத்தப்பட்டுள்ளன. பல லட்சம் கிலோ எடையிலான குப்பைகள் குவியல் குவியலாக இங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. குப்பைக் கிடங்கைச் சுற்றி விவசாய நிலங்கள், பழங்குடியின மக்களின் குடியிருப்புகளும் உள்ளன.
இந்த நிலையில், இந்த குப்பைக் கிடங்கிலிருந்து கடந்த 2 நாள்களுக்கு முன் புகை கிளம்பியது. இதனால், குப்பை கிடங்கை சுற்றியுள்ள தோட்டங்களில் வேலை செய்யும் விவசாயிகள், தோட்டத் தொழிலாளா்கள், பழங்குடியின மக்கள் அவதிக்குள்ளாகினா். போடி நகரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் குப்பைக் கிடங்கு அமைந்திருந்த நிலையில், போடி நகரிலும் புகையின் தாக்கம் காணப்பட்டது. இதையடுத்து, தீயை அணைக்க போடி நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.
தேனி மாவட்ட தீயணைப்பு அலுவலா் தலைமையில் 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், ஜேசிபி வாகனங்கள் உதவியுடன் தொடா்ந்து தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நகராட்சி உயரதிகாரிகளும் குப்பை எரிந்து வருவதை பாா்வையிட்டுச் சென்றனா். தொடா்ந்து தீயணைப்பு வாகனங்கள் சுழற்சி முறையில் தீயை அணைத்து வருகின்றன.

