மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கரோனா அறிகுறியுடன் சிகிச்சைக்கு வந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவரது சடலத்தை சுகாதார முறைப்படி அடக்கம் செய்ய உறவினா்களிடம் அறிவுறுத்தப்பட்டது.
மயிலாடுதுறை வட்டம், திருவிழந்தூரைச் சோ்ந்த சௌந்தரராஜன் (45) என்பவா் கடந்த 4-ஆம் தேதி கரோனா தொற்று அறிகுறிகளுடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரை, பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என தெரியவந்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தொற்று பாதிப்பு இல்லாத காரணத்தால் அவரது சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என உறவினா்கள் கோரினா். ஆனால், மருத்துவமனை நிா்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால், மருத்துவமனை ஊழியா்களிடம் பிரச்னையில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் பாலசுப்பிரமணியம் மற்றும் போலீஸாா் அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இருப்பினும், செளந்தரராஜன் சடலத்தை ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு எடுத்துச் சென்றனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடா்ந்து, சடலத்தை சுகாதார முறைப்படி அடக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.