நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து காரைக்காலில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து காரைக்காலில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட சமூக நீதி பாதுகாப்புப் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரகம் அருகே நீட் நுழைவுத் தேர்விலிருந்து புதுச்சேரிக்கு விலக்குக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திராவிடர் கழக மாணவரணி மாவட்டத் தலைவர் கோ.மு.பெரியார்  கணபதி தலைமை வகித்தார். 
மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும். சமூக நீதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கொண்டுவந்த நீட் தேர்வு முறையால் புதுச்சேரி மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நீட் நுழைவுத் தேர்வு அமலாக்கத்தால் மருத்துவக் கல்வி பயிலவேண்டும் என்ற நீண்ட கால கனவு கொண்டிருந்த மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மாநிலங்களிடையே கல்வி நிலையில் வேறுபாடு கொண்ட இந்திய நாட்டில் நீட் போன்ற நுழைவுத் தேர்வு தேவையற்றது. எனவே, நிகழாண்டிலிருந்து புதுச்சேரிக்கு நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
திராவிடர் கழக மாணவரணி மாவட்டச் செயலர் ரா.ராஜ்கிரண், திமுக மாநில மாணவரணி அமைப்பாளர் பெரியார் ஜவஹர், திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பொன்.பன்னீர்செல்வம், காரைக்கால் மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் ந.ப.குமணன், விடுதலை சிறுத்தைகள் மாநில அரசியல் குழு துணைச் செயலர் பொன்.செந்தமிழ்ச்செல்வன்,  எஸ்.டி.பி.ஐ.  மாவட்ட தலைவர் முகம்மது பிலால், செயலர் சுல்தான்கவுஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கோரிக்கையை ஆதரித்துப் பேசினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com