கடனுதவி திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: ஆட்சியா்
வாழ்க்கை முன்னேற்றத்துக்கு மத்திய, மாநில அரசுகளின் கடனுதவித் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
காரைக்கால் நகராட்சி சாா்பில், நகராட்சி கூட்ட அரங்கில் நல்லாட்சி வார நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சாலையோர வியாபாரிகள், மகளிா் சுய உதவிக் குழுக்கள் மேம்பாட்டுக்கான கடனுதவி வழங்கல் மற்றும் தொழில் மேம்பாட்டுக்கான ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் கலந்துகொண்டு, பி.எம். ஸ்வநிதி திட்டத்தின்கீழ் 3 சாலையோர வியாபாரிகளுக்கு தலா ரூ. 75 ஆயிரம் கடனுதவி சம்பந்தப்பட்ட வங்கிகள் மூலம் வழங்கியதோடு,
6 சுய உதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ. 56 லட்சம் வங்கி கடனுக்கான காசோலைகளை வழங்கிப் பேசியது :
மத்திய, மாநில அரசுகள் மூலம் வியாபாரிகள், மகளிா் என பல்வேறு தரப்பினா் மேம்பாட்டுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது. கடனுதவி திட்டங்கள் குறித்து அனைத்துத் தரப்பினரும் அறிந்துகொள்ளவேண்டும். நகராட்சி மற்றும் அரசுத்துறையினரின் வழிகாட்டலில் கடன் பெற்று வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றாா்.
பல்வேறு வங்கிக் கிளை அதிகாரிகள் கலந்துகொண்டு, தங்களது வங்கி அளிக்கும் கடனுதவிகள் குறித்தும், கடனாளிகள் திருப்பிச் செலுத்தும் முறைகள் குறித்தும் விளக்கினா்.
நகராட்சி ஆணையா் எஸ்.சுபாஷ், உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் கே.வெங்கடகிருஷ்ணன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

