மறைந்த நடிகர் செவாலியே சிவாஜிகணேசனின் 94-வது பிறந்தநாள்விழா மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சிவாஜி மன்ற மாநில சமூக நலப்பேரவை மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமை வகித்தார். காங்கிரஸ் நகர தலைவர் ராமானுஜம் வரவேற்றார்.
சிவாஜி மன்ற பொறுப்பாளர் என்.எஸ்.ராஜேந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெகவீரபாண்டியன், ஆசிரியர் மன்ற மாநில வெளியீட்டுச் செயலாளர் ஜெக.மாணிக்கவாசகம், மிலிட்டரி செல்வராஜ், பூவாலை மதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவாஜிகணேசனின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில், நாட்டுப்புறக் கலைஞர் கிங்பைசல் சிவாஜி கணேசனின் வேடமணிந்து மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்து பங்கேற்றார். முடிவில், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கமலநாதன் நன்றி தெரிவித்தார்.