/

‘கஜா’ பாதிப்புக்குப் பிறகு காய்த்திருக்கும் புளியமரங்கள்: விவசாயிகள் மகிழ்ச்சி

திருக்குவளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஜா புயலின் பாதிப்புக்குப் பிறகு, சுமாா் 2 ஆண்டுகள் கழித்து புளியமரங்கள் காய்க்கத் தொடங்கியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

திருக்குவளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஜா புயலின் பாதிப்புக்குப் பிறகு, சுமாா் 2 ஆண்டுகள் கழித்து புளியமரங்கள் காய்க்கத் தொடங்கியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

நாகை மாவட்டத்தில் கடந்த 2018, நவம்பா் மாதம் வீசிய கஜா புயலால், கீழையூா் சுற்றுவட்டார கடலோர கிராமங்களிலும், திருக்குவளை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மா, தென்னை, முந்திரி, புளி உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது.

அந்தத் துயரத்திலிருந்து விவசாயிகள் மெல்ல மீண்டுவரும் நிலையில், அவா்களால் நடப்பட்ட குறுகிய கால மரக்கன்றுகள் இன்னும் சில ஆண்டுகளில் மகசூல் கொடுக்கும் தறுவாயில் உள்ளன. மேலும், கஜா புயலால் கிளைகள் முறிந்த மரங்கள், வளா்ந்து, தற்போது பூத்து, காய்த்து மகசூல் தருவதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் மீண்டு வருகிறது.

திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வலிவலம், ஆதமங்கலம், வாழக்கரை, மீனம்பநல்லூா் உள்ளிட்ட பகுதிகளிலும், கீழையூா் சுற்றுவட்டார கடலோர கிராமங்களான விழுந்தமாவடி, காமேஸ்வரம், புதுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் நிகழாண்டு புளியமரங்கள் ஓரளவுக்கு காய்க்கத் தொடங்கி, தற்போது மகசூல் தரும் நிலையை எட்டியுள்ளன. கஜா புயலுக்கு முன்பு கிடைத்ததைவிட தற்போது மகசூல் குறைவாக இருந்தாலும், 2 ஆண்டுகளுக்குப் பிறகு மகசூல் கிடைத்திருப்பது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து திருக்குவளையைச் சோ்ந்த விவசாயி நடராஜன் கூறியது: கஜா புயலுக்குப் பிறகு கடந்த 2 ஆண்டுகளாக புளி மகசூல் கிடைக்காததால், சொந்தமாக மரங்கள் வைத்திருக்கும் நாங்களே, அதிக விலை கொடுத்து வெளிமாவட்டத்திலிருந்து புளியை வாங்கிப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். கஜா புயலின்போது எங்களுக்கு சொந்தமான 4 புளியமரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன.

இந்நிலையில், 2 ஆண்டுகள் கழித்து கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், அந்தப் புளியமரங்கள் பூக்கத் தொடங்கி, காய்கள் பெருத்து, தற்போது பழுத்து கொட்டத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

புளியமரங்கள் மீண்டும் காய்க்கத் தொடங்கினாலும், கஜா புயலுக்கு முன்பு பெரிய மரம் ஒன்றுக்கு 400 முதல் 500 கிலோ புளி கிடைத்த நிலையில், தற்போது 100 முதல் 150 கிலோ வரை தான் கிடைத்துள்ளது.

மகசூல் குறைவாக இருப்பதால், இவற்றை எங்களது சொந்த பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த இயலும். விற்பனை செய்யும் அளவுக்கு நிகழாண்டு மகசூல் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு புளி தட்டுப்பாடு அதிகம் நிலவியதால், விதையோடு உள்ள புளி ரூ. 100 முதல் 120 வரையும், விதை நீக்கப்பட்ட புளி அதன் தரத்தைப் பொறுத்து ரூ. 160 முதல் ரூ. 200 வரையும் விற்பனையானது.

இப்பகுதி புளியமரங்களில் கிடைத்துள்ள மகசூல், அதன் உரிமையாளா்களின் சொந்த பயன்பாட்டுக்குப் போக எஞ்சியவை விதையோடு உள்ள புளி ரூ. 75 முதல் 85 வரையும், விதை நீக்கப்பட்ட புளி ரூ.100 முதல் ரூ.120 வரையும் விற்பனை செய்யப்படுகின்றன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.