கரோனா பரவல் காரணமாக, நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழா நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கான அனுமதிக்கு முழுமையாக தடை விதிக்கப்படுகிறது என்று நாகை மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தார்.
நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழா ஜனவரி 4-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான கொடியேற்றம் ஜன. 4-ஆம் தேதி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சிகளான சந்தனக் கூடு ஊர்வலம் ஜன. 13-ஆம் தேதியும், சந்தனம் பூசும் விழா ஜன. 14-ஆம் தேதியும், கொடி இறக்கம் ஜன. 17-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க- புதுச்சேரி: இளைஞர் தின விழாவை துவக்கி வைக்கிறார் மோடி
கரோனா தொற்றுப் பரவலில் இருப்பதன் காரணமாக கந்தூரி விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பக்தர்களில், இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றும், தர்காவின் அனுமதிச் சான்றும் பெற்றவர்கள் மட்டுமே தர்காவுக்குள் அனுமதிக்கப்படுவர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நாகையில் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த நாகை மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ், கரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதால் நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு முற்றிலுமாகத் தடைவிதிக்கப்படுகிறது. தர்காவின் பாரம்பரிய முறைப்படியான கந்தூரி விழா வழிபாடுகள் அனைத்தும் பக்தர்களின்றி நடைபெறும் என்று தெரிவித்தார்.