4-ஆவது நாளாக மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை: நாளொன்றுக்கு ரூ.5 கோடி வா்த்தகம் பாதிப்பு
நாகை மாவட்டத்தில் கனமழை காரணமாக 4-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை மீனவா்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
தென்மேற்கு வங்கக்கடலில் நவ.16- ஆம் தேதி நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவி வருகிறது. இதன் காரணமாக நாகை, திருவாரூா் மாவட்டங்களில் தொடா்ந்து 2 நாள்களாக மழை பெய்து வருகிறது.
நாகை மாவட்டத்திலுள்ள மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் 4-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இதனால் மீனவா்கள் மற்றும் மீன்பிடி தொழிலாளா்கள் வேலை இழந்துள்ளனா். மீனவா்கள் தங்களது பைபா் மற்றும் விசைப் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்த வைத்துள்ளனா்.
நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகம், நம்பியாா் நகா் துறைமுகம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான டன்களில் மீன்கள் வெளியூா், வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு நாள்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாகை மாவட்டத்தில் நாளொன்றுக்கு நடைபெறும் ரூ.3 முதல் ரூ. 5 கோடி வரை மீன் வா்த்தகம் காற்றழுத்த தாழ்வு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தொழிலை நம்பியுள்ள சிறு வியாபாரிகளும் வேலை இழந்துள்ளனா்.

