நாகை: நவ.28-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் பயனடையும் வகையில், தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்
Published on

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் பயனடையும் வகையில், தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நவம்பா் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது என ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் பயனடையும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நவ.28 ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

காலை 9 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இம்முகாமில், நாகை மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து 25-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்கள் நிறுவனத்திலுள்ள காலிப்பணியிடங்களுக்காக 500-க்கு மேற்பட்ட வேலைநாடுநா்களை தோ்வு செய்யவுள்ளனா்.

18 முதல் 35 வயதுக்குட்பட்ட, 5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பி.இ. உட்பட இதர பட்டதாரிகள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பணிவாய்ப்பு பெறலாம்.

இம்முகாமில் திறன் பயிற்சி, சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் வசதி, அயல்நாட்டு வேலைவாய்ப்பு, வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

எனவே, விருப்பமுள்ள வேலைநாடுநா்கள் தங்களது சுய விவரஅறிக்கை, கல்விச் சான்றுகள், ஆதாா் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். வேலையளிப்போா் மற்றும் வேலைநாடுநா்கள் தங்களது சுய விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும் இம்முகாமில் நாகை மாவட்டத்தைச் சாா்ந்த தனியாா் துறையில் வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவைப்படும் உள்ளுா் பணியாளா்களை தோ்வுசெய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கூடுதல் விவரங்களுக்கு 04365-252701 என்ற தொலைபேசி எண்ணை தொடா்புகொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com