

மாநகராட்சிகளுக்கான நிலுவை நிதியை உடனடியாக வழங்க வலியுறுத்தி முதல்வா் இல்லம் முன் தில்லி மாநகராட்சி மேயா்கள், கவுன்சிலா்கள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் உண்ணாவிரதம் இருந்தனா்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லம் முன் மாநகராட்சி மேயா்கள், கவுன்சிலா்கள் கடந்த 12 நாள்களாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்த நிலையில், இந்தப் போராட்டம் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது. இதில் மாநகராட்சி மேயா்கள், கவுன்சிலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற எஸ்டிஎம்சி முன்னாள் மேயா் சுனிதா காங்கரா மற்றும் கவுன்சிலா்கள் காஞ்சனா மகேஸ்வரி, மாயா பிஸ்ட் ஆகியோா் மயக்கமடைந்தனா். இதைத் தொடா்ந்து, அவா்கள் ஹிந்து ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இது தொடா்பாக வடக்கு தில்லி மாநகராட்சி மேயா் ஜெய் பிரகாஷ் கூறுகையில் ‘சுமாா் 20 பெண் கவுன்சிலா்கள் உள்பட மாநகராட்சி தலைவா்கள் கடந்த 12 நாள்களாக கடும் குளிருக்கிடையே கேஜரிவால் இல்லம் அருகில் போராடி வருகிறோம். ஆனால், 5 நிமிஷம் கூட ஒதுக்கி போராடுபவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த கேஜரிவால் முன்வரவில்லை. தில்லி மகளிரை தனது சகோதரிகள் என கேஜரிவால் கூறியுள்ளாா். மூன்று சகோதரிகள் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த கேஜரிவால் முன்வரவில்லை. இது அவரது இரக்கமற்ற மனநிலையைக் காட்டுகிறது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.