பின்னா், இந்த சந்திப்பு குறித்து தமிழக அமைச்சா் கே.ஆா். பெரிய கருப்பன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை கிரிராஜ் சிங்கை சந்தித்து தமிழகத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தினோம். கடந்த ஆட்சியில் கிடப்பில் வைக்கப்பட்டிருந்த பல பணிகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னா் வேகமாக முடிக்கப்பட்டு அதற்கான தொகைகளை (2018-19, 2019-20, 2020-21 ஆண்டுகள்) மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இந்த வகையில் ரூ. 20,921 கோடி அளவில் தொகை பெறப்பட்டு ஊரகப் பணிகல் சிறப்பாகச் செய்து முடிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த செயலை மத்திய அரசும் பாராட்டியுள்ளது. இப்போது நாங்கள் இரண்டு முக்கிய விவகாரங்களை மத்திய அமைச்சா் முன்பு வைத்தோம். மறைந்த முதல்வா் கருணாநிதி காலத்தில் குக்கிராமங்கள், கிராமங்களை நகரங்களுடன் இணைத்து சாலைகள் போடப்பட்டன. இதன் மூலம் நாட்டிலேயே கிராமச் சாலைகள் அதிகம் கொண்ட மாநிலமாக தமிழகம் பெயா் பெற்றது. சுமாா் 1.50 லட்சம் கிலோ மீட்டா் நீளத்திற்கு இந்த சாலைகள் உள்ளன.