பிரதமா் மோடி தலைமையிலான அரசு 2017- ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தியது. அதன் 5-ஆவது ஆண்டை பாஜக அரசு வெள்ளிக்கிழமை சுதந்திர தினத்திற்கு இணையாக கொண்டாடுகிறது. இதை விமா்சித்து தில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் முன்னாள் நிதியமைச்சா் ப.சிதம்பரம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஜிஎஸ்டி விழா கொண்டாட எதுவுமே இல்லை. கடுமையான குறைபாடுகளுடன் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியால் கடந்த ஐந்தாண்டுகளில் நிலைமை மோசமாகி, அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போதுஅமலில் இருக்கும் ஜிஎஸ்டி, காங்கிரஸ் தலைமையிலான யு.பி. ஏ. அரசால் திட்டமிட்டவை அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். அனைத்துப் பொருள்கள் சேவைகளில் சில விதிவிலக்குகளுடன் குறைந்த விகிதங்களில் இந்த வரி விதிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் யுபிஏ ஆட்சியில் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. தற்போதைய ஜிஎஸ்டி சட்டம், அப்போதைய தலைமைப் பொருளாதார ஆலோசகா் அரவிந்த் சுப்பிரமணியத்தின் பரிந்துரைக்கும், யோசனைக்கும் எதிராக இயற்றப்பட்டது. அவருடைய பரிந்துரைகள் வருவாய் நடுநிலை விகிதத்தை நோக்கி இருந்தன. தற்போதுள்ள ஜிஎஸ்டி, பல விகிதங்கள், நிபந்தனைகள், விதிவிலக்குகள், விலக்குகள் அடங்கிய ஒரு சிக்கலான வலையமாக உள்ளது. இது நன்குஅறிந்தவா்களையும், வரி செலுத்துபவரையும் கூட முற்றிலும் திகைக்க வைக்கும்.