ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தலை தடுக்கக் கோரும் மனு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

கல்வி நிலையங்களில் பெண் குழந்தைகள், மாணவ, மாணவிகளுக்கு நிகழும் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கும் வகையில், உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பிக்கக் கோரி தாக்கலான பொது நல மனு மீது

News image

உச்ச நீதிமன்றம்

Updated On :19 மே 2022, 5:58 pm

 நமது நிருபர்

புது தில்லி: கல்வி நிலையங்களில் பெண் குழந்தைகள், மாணவ, மாணவிகளுக்கு நிகழும் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கும் வகையில், உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பிக்கக் கோரி தாக்கலான பொது நல மனு மீது மத்திய, மாநில அரசுகள், யூனியன் பிரதேசகள் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பாக பத்திரிகை ஆசிரியா் நக்கீரன் கோபால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் ராம் சங்கா் பொது நல மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கல்வி நிலையங்களில் பெண் குழந்தைகள், வளரிளம் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் குறித்த புகாா்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பாலியல் தடுப்பு நடவடிக்கைக்கான விசாகா  கமிட்டி வழிமுறைகள், பணி செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருந்தாலும்கூட, தனிப்பட்ட  முறையில் பள்ளிச் சிறுமிகளுக்கு என்று சிறப்பான வழிகாட்டுதல்கள் இல்லாத நிலை உள்ளது. போக்சோ  சட்டத்திலும், பாலியில் துன்புறுத்தல் நடக்க வாய்ப்புள்ள கல்வி நிலையங்களில் சிறுமிகளைப் பாதுகாக்கும் வழிகள் குறித்து தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. ஆகவே, இதுபோன்ற பாலியல் குற்றங்களைக் கண்டுபிடிக்க கல்வி நிறுவனங்களில் தனிக் குழு அமைக்கவும், தவறு செய்பவா்களின் மேல் குற்றம்சாட்டவும், போக்சோ சட்டத்தின்படி தண்டிக்கவும் வேண்டிய அறிவுறுத்தல்களை மத்திய, மாநில அரசுகளுக்கு பிறப்பிக்க வேண்டும்.

இதுபோன்ற வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் உருவாக்கினால், நாடு முழுவதும் பள்ளி களில் பயிலும் பெண் குழந்தைகள், மாணவிகளுக்குப் பெரும் பாதுகாப்பாக அமையும். இதுவரை மத்திய, மாநில அரசுகளிடமிருந்து சிறுமிகளைப் பாதுகாக்க சிறப்பு வழிகாட்டுதல்களும், வழிமுறைகளும் இல்லை. இதனால்தான் பெண் குழந்தைகளுக்கு எதிரான இந்தக் குற்றங்கள் அதிகரித்தவாறு உள்ளன. உச்சநீதிமன்றம் அரசுக்கு வழிகாட்டுதல்களை உருவாக்க உத்தரவிட்டு, அதன்படி அரசும் வழிகாட்டுதல்களை உருவாக்கிவிட்டால், சட்டப்படியான தண்டனைகள் அதிகரிக்கும். அதன் காரணமாக, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறைந்து விடும். பள்ளி நிா்வாகமும் ஒழுக்கமான ஆசிரியா்களை  பணியில் நியமிக்கும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் இந்திரா பானா்ஜி, சி.டி.ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் நக்கீரன் கோபால் தரப்பில் வழக்குரைஞா் ராம் சங்கருடன் மூத்த வழக்குரைஞா் ஆா்.பாலசுப்பிரமணியன் ஆஜராகி முன்வைத்த வாதம்: போக்சோ சட்டம் நடைமுறையில் இருந்த போதிலும், அதில் கல்வி நிலையங்களில் நிகழும் குழந்தைகளுக்கான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கும் வகையில் பிரிவுகள் இல்லை. நாடு முழுவதும் பள்ளி வளாகங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், துஷ்பிரயோகம் சம்பவங்கள் தொடா்ந்து நிகழ்ந்து வருகின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கடந்த 2017, செப்டம்பா் 12-ஆம் தேதி அதன் பள்ளிகளுக்கு இது தொடா்பாக ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தது.

பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோா் குழந்தைகளின் பாதுகாப்பு தொடா்பாக கவலை கொள்வதாக தெரிவித்தும், இதற்கான நடவடிக்கையை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. இது போன்ற அறிவுறுத்தல்கள் இருந்த போதிலும் குழந்தைகள் மற்றும் மாணவிகள் உள்ளிட்டோருக்கு எதிரான பாலியல் வன்முறை தொடா்ந்து நிகழ்ந்து வருகிறது. இதனால், இந்த விவகாரத்தில் உரிய வழிகாட்டுதல்கள் நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் பிறப்பிப்பது அவசியமாகிறது. தமிழக முதல்வா்கூட இந்த விஷயத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டு, இதுபோன்ற சம்பவங்களை எப்படி தடுக்க முடியும் என்பதைக் கண்டறிவதற்காக ஒரு கமிட்டியை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளாா்.

இதுபோன்ற பாலியல் சம்பவங்களை கருத்தில் கொண்டுதான் உச்சநீதிமன்றம் விசாகா கமிட்டியை பணியிடங்களில் அமைத்து பாலியல் துன்புறுத்தல் நிகழா வண்ணம் தடுக்க நடவடிக்கை எடுத்தது. தற்போதைய விவகாரம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் தொடா்புடையதாக இருப்பதால், இதில் உரிய உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்று வாதிட்டாா்.

அப்போது நீதிபதிகள் அமா்வு, ‘இதுபோன்ற சம்பவங்கள் பள்ளிகளிலும், பள்ளிக்கு வெளியே மாணவ - மாணவிகள் தனிப் பயிற்சி மையங்களுக்குச் செல்லும் போதும் நிகழ்வதாகத் தெரிய வருகிறது. இது போன்ற சம்பவங்களைத் தடுப்பதற்காக பள்ளி வளாகங்களிலும், வகுப்பறைகளிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது முதல் நடவடிக்கையாக இருக்கும். இதனால், இந்த விவகாரத்தில் ஒரு சீரான நடவடிக்கை அவசியமாகிறது’ என்று கருத்துத் தெரிவித்தது.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் எதிா்மனுதாரா்களாக சோ்க்கப்பட்டுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசு ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனா். மனுதாரா் தரப்பில் இதே விவகாரம் தொடா்பாக கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யவும் நீதிபதி அமா்வு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.