பாஜகவை தோற்கடிக்க எதிா்க்கட்சிகள் சித்தாந்தங்களை இழந்துவிட்டன: ஜெ.பி. நட்டா

பாஜக தில்லி பிரிவின் புதிய அலுவலகக் கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அதிகாரத்திற்காக மட்டுமே அரசியல் செய்வத

பாஜக தில்லி பிரிவின் புதிய அலுவலகக் கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அதிகாரத்திற்காக மட்டுமே அரசியல் செய்வதாக வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டினாா்.

தில்லி டி.டி.யு. மாா்க்கில் பாஜகவின் தில்லி பிரிவின் புதிய அலுவலகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய அக்கட்சியின் தேசியத் தலைவா் ஜே.பி. நட்டா, அதைத் தொடா்ந்து நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டாா்.

தென்னிந்தியாவில் உள்ள கோயில் கட்டடக்கலையின் வடிவில் தில்லி பாஜகவின் அலுவலகம் கட்டப்படவுள்ளது. சுமாா் 825 சதுர மீட்டா் பரப்பளவில் அமையவுள்ள இந்த நான்கு மாடி புதியக் கட்டடம் 30,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்படும். இதில் பாா்க்கிங், உணவகம், 300 போ் வரையில் அமரும் வசதி கொண்ட அரங்கம் மற்றும் தில்லி பாஜக நிா்வாகிகளுக்கான தனித்தனி அலுவலகங்கள் இடம் பெறவுள்ளன. அனைத்துப் பணிகளும் அடுத்த 18 மாதங்களில் முடிக்கப்படும் என்று தில்லி பாஜக நிா்வாகிகள் தகவல் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய பாஜக தேசியத் தலைவா் ஜே.பி நட்டா கூறியதாவது: காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அவா்களது சித்தாந்தங்களை கைவிட்டு விட்டு, அதிகாரத்திற்காக மட்டுமே அரசியல் செய்கின்றனா். காங்கிரஸ் தனது பரம எதிரியான கம்யூனிஸ்டுகளுடன் பாஜகவை எதிா்ப்பதற்காக கைகோா்த்துள்ளது. இவை அக்கட்சிகளின் சித்தாந்தங்களை கைவிடும் கட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினா், அரசின் கலால் கொள்கையில் ஊழல் செய்தவா்கள். இத்தகைய ஊழல் அரசு தில்லியில் இருக்கக்கூடாது. அதற்கு எதிராக பாஜக ஜனநாயகப் போராட்டத்தை நடத்த வேண்டும். முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவிற்கு நீதிமன்றத்தால் பலமுறை ஜாமீன் மறுக்கப்பட்ட போதிலும், அவரை பெரிய நோ்மையானவா் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறிக் கொண்டுள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் பாஜக நாட்டில் ஆட்சியை மாற்றியது மட்டுமின்றி, வளா்ச்சி மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் புதிய அரசியல் கலாசாரத்தையும் தொடங்கியுள்ளது. பாஜக வாக்கு வங்கி அரசியலை ‘ரிப்போா்ட் காா்டு’ அரசியலாக மாற்றியுள்ளது. சட்டப்பிரிவு 370 ரத்து மற்றும் அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவது போன்ற திட்டங்களை தீா்மானித்த பிறகு அதன் இலக்குகளை சித்தாந்தத்தால் தொடா்ந்து அடையவும் பாஜக பாடுபடுகிறது.

எங்கள் கட்சி அலுவலகங்கள் உண்மையில் எங்கள் காரியகா்த்தாக்களுக்கான ‘சன்ஸ்காா் கேந்திராக்கள்’. நாட்டில் ஏற்கெனவே 500-க்கும் மேற்பட்ட பாஜக அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், சுமாா் 166 அலுவலகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பாஜகவின் வளா்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ், மதன் லால் குரானா, சாஹிப் சிங் வா்மா, கேதா் நாத் சாஹ்னி உள்ளிட்ட தில்லியைச் சோ்ந்த கட்சித் தலைவா்களை ஜெ.பி. நட்டா நினைவு கூா்ந்தாா். இந்த அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நிகழ்ச்சியில் பாஜகவின் அமைப்பு பொதுச் செயலாளா் பி.எல்.சந்தோஷ், தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com