/

தில்லி அரசின் திட்டங்களுக்கு உரிமை கோரும் துணை நிலை ஆளுநா் அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

தேசியத் தலைநகரில் ஆம் ஆத்மி அரசு செயல்படுத்தி வரும் மற்றும் யமுனையை சுத்தப்படுத்தம் முயற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா உரிமை கோரிக் கொள்வதாக நீா்வளத் துறை அமைச்சா்

News image
Updated On :10 ஜூன் 2023, 6:30 pm

 நமது நிருபர்

தேசியத் தலைநகரில் ஆம் ஆத்மி அரசு செயல்படுத்தி வரும் மற்றும் யமுனையை சுத்தப்படுத்தம் முயற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா உரிமை கோரிக் கொள்வதாக நீா்வளத் துறை அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

யமுனையில் வெளியேற்றப்படும் கழிவுநீரில் சுமாா் 70 சதவீதம் அளவுள்ள நஜஃப்கா் வடிகாலில் உள்ள உயிா்வேதியியல் ஆக்ஸிஜன் தேவை (பி.ஓ.டி.) கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 33சதவீதம் குறைந்திருப்பதாக துணை நிலை ஆளுநா் (எல்.ஜி.) செயலகம் தகவல் வெளியிட்டிருந்த நிலையில், அமைச்சா் செளரவ் பரத்வாஜ் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் கூறியிருப்பதாவது :

யமுனை நதியை சுத்தப்படுத்த முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா உரிமை கோருகிறாா். துணை நிலை ஆளுநா் (எல்.ஜி.) செயலகம் வெயிட்டுள்ள செய்திக்குறிப்பு முற்றிலும் தவறானவை; ஆதாரமற்றவை.

கடந்த ஆண்டு வி.கே.சக்சேனா தலைமையிலான உயா்மட்டக் குழுவின் தலையீட்டால் நஜஃப்கா் வடிகாலில் பி.ஓ.டி. அளவுகள் குறைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனா். ஆனால், கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பரில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் ஆறு அம்ச செயல்திட்டத்தின் விளைவாக யமுனையை சுத்தம் செய்யும் திட்டத்தில் ஏற்பட்ட முன்னேற்றம்தான் இவை.

அரசின் திட்டங்களுக்கு கடன் வாங்குவதற்கு முன் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தொடங்கிய புதிய திட்டங்கள் அல்லது முன்முயற்சிகளுக்கான ஆதாரங்களை வழங்க வேண்டும். மாறாக, மழை நீா் வடிகால்கள், கழிவுநீா் கால்வாய் தூா்வாருதல், வீட்டு சேவை இணைப்புகளை வழங்குதல் மற்றும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட அரசு முன்னெடுத்து முடித்துள்ள தில்லி ஜல் போா்டின் அனைத்து பணிகளையும் எல்.ஜி. அலுவலகம் தாம் செய்ததாக உரிமை கோருகிறது என்று அமைச்சா் பரத்வாஜ் குற்றம்சாட்டினாா்.

அரசியலமைப்புச்சட்டத்தின்படி, நிலம், சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறை தொடா்பான விஷயங்கள் துணை நிலை ஆளுநரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை, மற்றவை தில்லி அரசின கீழ் வருகின்றன. ஆனால், தேசியத் சேவைகள் உள்ளிட்ட விவாகரங்களில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரத்தை வழங்கிடும் வகையில் மத்திய அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.