தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் மற்றும் மு.க. ஸ்டாலின் கைதை கண்டித்து, அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக சார்பில் கொட்டாரம் சந்திப்பில் வியாழக்கிழமை சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
தெற்கு ஒன்றியச் செயலர் தாமரைபாரதி தலைமை வகித்தார். வடக்கு ஒன்றியச் செயலர் மதியழகன், மாவட்ட துணைச் செயலர் முத்துசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் சாய்ராம், மாவட்ட நிர்வாகி குமரி ஸ்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறியலில் பங்கேற்ற ஆஸ்டின் எம்.எல்.ஏ., ஒரு பெண் உள்ளிட்ட 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தோவாளை ஒன்றிய திமுக சார்பில் ஆரல்வாய்மொழியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு, ஒன்றியச் செயலர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூதலிங்கம் பிள்ளை, மாவட்டப் பிரதிநிதிகள் நாகராஜன், லாரன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்போராட்டத்தில் பங்கேற்ற, திமுக மாநிலப் பேச்சாளர் செல்வகுமார், பேரூர் செயலர்கள் சிவகுமார், ஆலிவர்தாஸ், ஊராட்சி செயலர்கள் கல்யாணசுந்தரம், இம்மானுவேல் உள்ளிட்ட 25 பேரை போலீஸார் கைது செய்தனர்.