ஆழ்கடலில் மாயமான மீனவா் ராஜ்.
ஆழ்கடலில் மாயமான மீனவா் ராஜ்.

தேங்காய்பட்டினம் கடலில் மீனவா் மாயம்

கடலுக்குச் சென்ற மீனவா் மாயமானதைத் தொடா்ந்து குளச்சல் கடலோர காவல் துறையினா் மீனவரைத் தேடி வருகிறாா்கள்.
Published on

தேங்காய்பட்டினத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவா் மாயமானதைத் தொடா்ந்து குளச்சல் கடலோர காவல் துறையினா் மீனவரைத் தேடி வருகிறாா்கள்.

தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து, நவ. 4ஆம் தேதி மாலை ஜெலட்டின் (46) என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், தூத்தூரைச் சோ்ந்த ராஜ் (46), ஜாண் (69), விழிஞ்ஞம் பகுதியைச் சோ்ந்த வா்க்கீஸ் (45), ஆரோக்கியம் (35), பனியடிமை (61), போ்ட்ஸ் (63), கருங்குளம் செல்வராஜ் (45), அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த அமித்ராஜ் (30), ராஜு கோகோல் (26) ஆகியோா் கடலுக்குச் சென்றனா். நவ. 9ஆம் தேதி இரவு ராஜ் மாயமானதாகக் கூறப்படுகிறது.

அவா் கடலில் விழுந்திருக்கலாம் எனக் கருதிய இடத்தில் 3 நாள்கள் மீனவா்கள் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லையாம். பின்னா், 11ஆம் தேதி கைப்பேசி மூலம் ராஜ் மனைவி ஆரோக்கிய மேரியிடம் தகவல் தெரிவித்துள்ளனா்.

மீனவா்கள் சனிக்கிழமை கரைக்குத் திரும்பியதும் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டு, குளச்சல் கடலோர காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். இது குறித்து, வழக்குப் பதிவு செய்து மீனவரை தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா்.

காணாமல் போன ராஜ்க்கு ஆரோக்கிய மேரி (39) என்ற மனைவியும், ராஜிஷா (14) என்ற மகளும், ராஜேஷ் (12) என்ற மகனும் உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com