தூத்துக்குடி: தூத்துக்குடியில் பெண் தூய்மைப் பணியாளர் மர்ம நபரால் செவ்வாய்க்கிழமை காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் மஞ்சள் நீர் காயல் பகுதியைச் சேர்ந்தவர் கனகா(45). இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றிவந்தார்.
இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டதால், கனகா தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், இவர் வழக்கம்போல செவ்வாய்க்கிழமை காலையில் தூய்மைப் பணிக்காக தூத்துக்குடி சிஜிஇ காலனி பகுதியில் பேருந்தில் வந்து இறங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் கனகாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீஸார் கனகாவின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கனகாவை வெட்டிக்கொலை செய்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.