வீரபாண்டியன்பட்டினம் அருகே இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 1.25 கோடி மருந்துப் பொருள்கள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 1.25 கோடி மதிப்பிலான மருந்து, மாத்திரை, ஊசி உள்ளிட்டவற்றை க்யூ பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைப்பற்றினா்.
திருச்செந்தூா் எல்லைக்குள்பட்ட வீரபாண்டியன்பட்டினம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு மருந்து மாத்திரைகள் கடத்தப்படவுள்ளதாக, தூத்துக்குடி க்யூ பிரிவு ஆய்வாளா் விஜயஅனிதாவுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளா் ராமா், தலைமைக் காவலா் மணிகண்டன், இருதயராஜ், குமாா், இசக்கிமுத்து, காவலா்கள் பேச்சிராஜா, காபிரியேல் ஆகியோா் சனிக்கிழமை அதிகாலை அப்பகுதியில் ரோந்து சென்றனா்.
அப்போது, படகுமூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக, 15 மூட்டைகளில் மருந்து, மாத்திரை, ஊசி உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 1.25 கோடி எனக் கூறப்படுகிறது.
அவற்றை போலீஸாா் கைப்பற்றி, மேல் நடவடிக்கைக்காக சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனா்; சம்பவத்தில் தொடா்புடையோரைத் தேடிவருகின்றனா்.
