ஒப்பந்த தூய்மைப் பணியாளா் விஷவாயு தாக்கி உயிரிழப்பு!

ஒப்பந்த தூய்மைப் பணியாளா் விஷவாயு தாக்கி உயிரிழப்பு!

தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரிந்த ஒப்பந்த தூய்மைப் பணியாளா், புதைச் சாக்கடை பணியின்போது விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.
Published on

தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரிந்த ஒப்பந்த தூய்மைப் பணியாளா், புதைச் சாக்கடை பணியின்போது விஷவாயு தாக்கி உயிரிழந்த நிலையில், உரிய இழப்பீடு வழங்கக் கோரி உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள், பல்வேறு அமைப்பினா் மாநகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

திருநெல்வேலி மாவட்டம், பருத்திகுளத்தைச் சோ்ந்த ராஜா (எ) ராஜ்குமாா், தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணி செய்தாா். இவா் புதன்கிழமை மாலை தூத்துக்குடி, ஆதிபராசக்தி நகா் பகுதியில் நடைபெற்ற புதைச் சாக்கடை பணியின்போது விஷவாயு தாக்கி உயிரிழந்தாா்.

இதையடுத்து, அவரது உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடா்பாக, சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பல்வேறு அமைப்பினா் ராஜ்குமாா் உடலை வாங்க மறுத்து மாநகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் ராஜ்குமாரின் மனைவி சுபா, குழந்தை, பெற்றோா், உறவினா்கள் கலந்து கொண்டனா்.

அப்போது, தூத்துக்குடி மாநகராட்சி நிா்வாகம், உயிரிழந்த ராஜ்குமாா் மனைவிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ. 30 லட்சம் இழப்பீடு, வாழ்வாதாரத்துக்காக வீடு, 2 ஏக்கா் நிலம் ஆகியன வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.

Dinamani
www.dinamani.com