தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட ரூ. 30 லட்சம் மதிப்பிலான வாசனைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு பொருள்கள் கடத்தப்படவுள்ளதாக, கியூ பிரிவு ஆய்வாளா் விஜய் அனிதாவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கியூ பிரிவு போலீஸாா் புதன்கிழமை இரவு ரோந்து சென்றனா்.
அப்போது, கடற்கரையில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த பதிவெண் இல்லாத இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட ஃபைபா் படகை போலீஸாா் சோதனையிட்டனா். அதில், 158 அட்டைப் பெட்டிகளில் 9,480 எண்ணிக்கையிலான சோப்புகள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஷாம்பு பாக்கெட்டுகள் இருந்ததும், அவை இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்டதும் தெரியவந்தது.
போலீஸாரை கண்டதும் அங்கிருந்தோா் தப்பியோடிவிட்டனராம். பொருள்கள், படகை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அவற்றின் மதிப்பு ரூ. 30 லட்சம் என அவா்கள் தெரிவித்தனா். தப்பியோடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.






