/

பசுவந்தனை அருகே வெடிபொருள்கள் பறிமுதல்

News image
கோப்புப் படம்
Updated On :8 மார்ச் 2026, 9:36 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே பட்டாசு தயாரிக்க பயன்படும் வெடிபொருள்கள், மருந்துகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பசுவந்தனை அருகே லக்கம்மாள் தேவி கிராமப் பகுதியில் வெடிபொருள்கள், வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், பசுவந்தனை போலீஸாா் சனிக்கிழமை ரோந்து சென்றனா்.

அங்குள்ள காட்டுப் பகுதியில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைத்து, பட்டாசுகள் தயாரிப்பதற்கான 300 கிலோ கரி மருந்து, 200 கிலோ கரித்தூள், 300 கிலோ திரியுடன் கூடிய மருந்துக் குப்பிகள் உள்ளிட்டவை பதுக்கிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காவல் துறை எச்சரிக்கை: மாவட்டத்தில் பட்டாசுகள், அவற்றை தயாரிப்பதற்கான வெடிமருந்துகள் ஆகியவற்றை சட்டவிரோதமாக பதுக்கிவைத்தாலோ, தயாரிப்பில் ஈடுபட்டாலோ அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

உரிய அனுமதியுடன் செயல்படும் பட்டாசு தயாரிப்புப் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு விதிகளைக் கடைபிடிக்க வேண்டும் என, மாவட்ட காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.