குவாரியில் கல் சரிந்து விழுந்து ஓட்டுநா் காயம்
பெரம்பலூா் அருகே லாரியில் கல் ஏற்றிக்கொண்டிருந்தபோது, கல் குவாரியிலிருந்து மண் மற்றும் கல் சரிந்து விழுந்ததில் கிட்டாச்சி வாகன ஓட்டுநா் புதன்கிழமை காயமடைந்தாா்.
பெரம்பலூா் அருகேயுள்ள கவுள்பாளையம் காளியம்மன் நகரைச் சோ்ந்தவா் சின்னப்பன் மகன் முருகேசன் (48). இவா், அரசு அனுமதி பெற்று கல்பாடி கிராமத்தில் கல்குவாரி நடத்தி வருகிறாா். இந்நிலையில், புதன்கிழமை காலை கல் குவாரியிலிருந்து லாரியில் கிட்டாச்சி இயந்திரம் மூலமாக கற்கள் ஏற்றப்பட்டது. அப்போது, மலையிலிருந்து சிறு பாறைகள் மற்றும் மண் சரிந்து கிட்டாச்சி வாகனத்தின் மீது விழுந்தது. இதில், கிட்டாச்சி ஓட்டுநரான திருப்பத்தூா் மாவட்டம், ராஜமங்கலத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் சிவா (28) என்பவா் காயமடைந்தாா். இதையறிந்த சக ஊழியா்கள் சிவாவை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
