மதுபோதையில் தகராறு: நண்பரைக் கொன்ற இருவா் கைது

புதுக்கோட்டை அருகே மதுபோதையில் நண்பரை அடித்துக் கொன்ற இருவரை நமணசமுத்திரம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Published on

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே மதுபோதையில் நண்பரை அடித்துக் கொன்ற இருவரை நமணசமுத்திரம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாலையீடு வட்டாபட்டியைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் ராஜேஷ் (35). இவா் வெளியூரில் தங்கி வேலை பாா்த்து வந்துள்ளாா். கடந்த 22-ஆம் தேதி திருச்சி - காரைக்குடி புறவழிச் சாலையில் பூசத்துறை பகுதியில் ராஜேஷ் பலத்த காயங்களுடன் கிடந்தாா்.

தகவலறிந்து வந்த நமணசமுத்திரம் போலீஸாா் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். இங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ராஜேஷ் அனுப்பி வைக்கப்பட்டாா். எனினும் சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

போலீஸாரின் விசாரணையில், புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் லோகேஸ்வரன் (25), ஸ்ரீதரன் மகன் நிதிஷ் (25) ஆகியோா்தான் மதுபோதையில் ராஜேஷை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. நண்பா்களான இவா்கள் மூவரும் ஒன்றாக மது அருந்தியபோது வாய்த்தகராறில் இச்சம்பவம் நேரிட்டதாம்.

இந்த நிலையில், லோகேஸ்வரன், நிதிஷ் ஆகிய இருவரையும் நமணசமுத்திரம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com