
தரமான, அறிவியல் ரீதியான, சமமான கல்வி வழங்க வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பிரசார பயணம் மேற்கொள்ளும் இந்திய மாணவர் சங்கக் குழுவினருக்கு தஞ்சாவூரில் புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
அனைவருக்கும் தரமான, அறிவியல் ரீதியான, பாகுபாடற்ற கல்வியை, ஆரம்பக் கல்வி முதல் ஆய்வு படிப்பு வரை அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவைக் கலைத்து உயர் கல்வியைச் சீரழிக்கக் கூடாது. அரசுப் பள்ளிகளை மூடக்கூடாது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
இப்பயணக் குழுவில் சங்கத்தின் அகில இந்திய தலைவர் வி.பி. சானு தலைமையில் அகில இந்திய துணைத் தலைவர் உச்சிமாகாளி, தமிழ் மாநிலச் செயலர் வி. மாரியப்பன், தலைவர் ஏ.டி. கண்ணன், துணைத் தலைவர் எம். கண்ணன், செயற்குழு உறுப்பினர் காவியா மற்றும் நிர்வாகிகள் இடம் பெற்றுள்ளனர்.
இப்பயணம் கன்னியாகுமரியில் செப். 3-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்ற இக்குழுவினர் தஞ்சாவூருக்கு புதன்கிழமை வந்தனர். இக்குழுவினருக்கு மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி அருகில் மாலை அணிவிக்கப்பட்டு, மேள, தாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், சங்கத்தின் மாவட்டச் செயலர் ஜி. அரவிந்தசாமி தலைமையில் கிளைத் தலைவர் வீரையன், செயலர் பிடல் காஸ்ட்ரோ உள்பட ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இக்குழுவினர் தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்குச் சென்று செப். 16-ம் தேதி காஷ்மீரில் முடிக்கவுள்ளனர். ஹிமாச்சல பிரதேசம், சிம்லாவில் அக்டோபர் மாத இறுதியில் நடைபெறவுள்ள அகில இந்திய மாநாட்டையொட்டி இப்பிரசார பயணம் மேற்கொள்ளப்படுகிறது என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




