திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தஞ்சையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு: ஆயுதம் ஏந்திய பெண் காவலர் பாதுகாப்பு வழங்கவும் மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவு    

தஞ்சையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு ரூ.  2 லட்சம் இழப்பீடு வழங்கவும், அவருக்கு ஆயுதம்

Updated On :23 ஜனவரி 2019, 7:54 am IST

தஞ்சையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு ரூ.  2 லட்சம் இழப்பீடு வழங்கவும், அவருக்கு ஆயுதம் ஏந்திய பெண் காவலர் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தஞ்சை மாவட்ட நிர்வாகத்துக்கு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சாவூர் திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த காயத்ரி, உயர்நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். 
அதில்,  கணவரை இழந்த நான், மகன்,  மகளுடன் வசித்து வருகிறேன். எனது மகள், திருபுவனம் பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில்,  ஜவுளிக் கடை உரிமையாளரின் நண்பரான சின்னப்பா என்பவர், நவ. 7ஆம் தேதி தீபாவளி விருந்தளிப்பதாகக் கூறி எனது மகளை அவரது வீட்டுக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளார். 
அன்று பிற்பகல் 3 மணியளவில் வீடு திரும்பிய எனது மகள் மயக்க நிலையில் இருந்தார். மேலும், அதிக ரத்தப் போக்கும் ஏற்பட்டது. இதனால் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தபோது, எனது மகள் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என மருத்துவமனையில் கூறினர்.
இதைத்தொடர்ந்து, அளித்த புகாரின்பேரில் சின்னப்பா கைது செய்யப்பட்டார். ஆனால் இந்த சம்பவத்தில் ஜவுளி கடை உரிமையாளர் உள்பட பலருக்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகம் உள்ளது. 
எனவே, எனது மகளுக்கு நீதி கிடைக்க  அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து, உரிய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார். இக் கடிதத்தின் அடிப்படையில் இந்த வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து  விசாரணைக்கு எடுத்தது.  நீதிபதிகள் கே.கே. சசிதரன், பி.டி. ஆதிகேசவலு அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நேரில் ஆஜரான தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், இதுதொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை நடத்துவதாக உறுதியளித்தார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது  தாயார், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குற்றவாளிகளிடம் இருந்து மிரட்டல்கள் வருவதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை மனு அளித்தனர். 
இதனையேற்ற நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆயுதம் ஏந்திய பெண் காவலரை பாதுகாப்புப் பணியில் நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜன. 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.