டெல்டா பகுதியில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள்: முதன்மை செயலாளர் சந்தீப் சக்சேனா

டெல்டா பகுதியில் 10 மாவட்டங்களில், ரூ.80 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது என முதன்மை செயலாளர் சந்தீப் சக்சேனா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். 
டெல்டா பகுதியில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள்: முதன்மை செயலாளர் சந்தீப் சக்சேனா

கூத்தாநல்லூர்: டெல்டா பகுதியில் 10 மாவட்டங்களில், ரூ.80 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது என முதன்மை செயலாளர் சந்தீப் சக்சேனா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். 

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், சித்தனக்குடி ஊராட்சி, கர்ணாவூர் கிராமத்திற்குள்பட்ட பனையனார் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை, கூடுதல் முதன்மைச் செயலாளர் சந்தீப் சக்சேனா நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். 

கூத்தாநல்லூர் வட்டம், ஒகைப்பேரையூர் மற்றும் கர்ணாவூர் கிராமம், பனையனார் வடிகால் வாய்க்கால், அனுமன் கோட்டக வடிகால் வாய்க்கால், தெற்கு பனையனார் வடிகால் வாய்க்கால் ஆகியவை ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதையொட்டி, சித்தனக்குடி ஊராட்சி, கர்ணாவூர் கிராமத்திற்குட்பட்ட பனையனார் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை, மாவட்ட ஆட்சியர் ப. காயத்ரி கிருஷ்ணன் முன்னிலையில், நீர் வளத்துறை கூடுதல் முதன்மைச் செயலாளர் சந்தீப் சக்சேனா நேரில் ஆய்வு செய்து, பணிகள் குறித்து பொறியாளர்களிடம் கேட்டறிந்தார். 

இதைத் தொடர்ந்து, அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: 

தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க, 2022 ஆம் ஆண்டு காவிரி டெல்டா பகுதியின் 10 மாவட்டங்களில், ரூ.80 கோடி மதிப்பீட்டில் தூர் வாரும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. பணிகளை துரிதப்படுத்தி சுமார் 150 பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு தூர்வாரும் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகிறது. 

இப்பணிகள் அனைத்தும் வரும் மே மாதம் 31 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும். தூர்வாரும் பணிகளை அந்தந்த பகுதியிலுள்ள உழவர் குழுக்களின் கண்காணிப்புக் குழுவினர்கள் ஒத்துழைப்புடன் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

மேட்டுர் அணையில் திறக்கப்படும் நீர், அனைத்து கடைமடை பகுதிகளுக்கும் செல்லக் கூடிய வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.12 கோடியே 8 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பீட்டில் 115 பணிகள் எடுக்கப்பட்டு, 1200.56 கிலோ மீட்டர் தூர்வாரும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளும் இடங்களில் இட ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டால் அதற்கான உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். 

ஆய்வில், நீர் வளத்துறை திருச்சி மண்டல தலைமை செயற்பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி, வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் பொ.முருகவேல், வடிநில உட்கோட்ட செயற்பொறியாளர் ஆர்.சீனிவாசன், கொரடாச்சேரி உதவி பொறியாளர் சி.சிதம்பரநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com