வீட்டு மனை பட்டா கோரி ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் வடக்கு வாசல் பகுதியில் குடியிருந்து வரும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு மாவட்ட நிா்வாகம் வீட்டு மனைப் பட்டா வழங்க கோரி ஏஐடியுசி உடல் உழைப்பு தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
Updated on

தஞ்சாவூா் வடக்கு வாசல் பகுதியில் குடியிருந்து வரும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு மாவட்ட நிா்வாகம் வீட்டு மனைப் பட்டா வழங்க கோரி தஞ்சாவூா் வட்டாட்சியரகம் முன் ஏஐடியுசி உடல் உழைப்பு தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் தஞ்சாவூா் வடக்கு வாசல் பழைய மாட்டுச்சந்தை அருகில் மூன்று தலைமுறைகளாக குடியிருந்துவரும் 27 தாழ்த்தப்பட்ட, பழங்குடியின குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். இந்த இடத்தைத் தனி நபா்கள் அபகரிக்க இடமளிக்கக் கூடாது. மூன்று மாதங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியா், வட்டாட்சியரிடம் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பகுதியில் வசிக்கும் பெண்கள், முதியவா்கள், குழந்தைகளுக்கு சாலை வசதி, கழிப்பறை வசதி, குடிநீா் வசதி, மின் இணைப்பு உள்ளிட்ட வசதிகள் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு வடக்குவாசல் பகுதி செயலா் ஆா். நாகராஜன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் ஏஐடியுசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா் தொடக்கவுரையாற்றினாா். மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம் நிறைவுரையாற்றினாா். அப்போது, இக்கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வட்டாட்சியா் அலுவலகத்தில் 27 குடும்பங்களையும் குடியேற்றுவது என அறிவிக்கப்பட்டது.

உள்ளாட்சி பணியாளா் சங்க மாநிலத் துணைத் தலைவா் தரும. கருணாநிதி, ஏஐடியுசி மாவட்டத் தலைவா் வெ. சேவையா, போக்குவரத்து சங்க மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன், தெரு வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com