குடியாத்தம், ஜன. 8: அரசின் நல உதவிகள், கடனுதவிகள், கருணைத் தொகைகள் உள்ளிட்ட அனைத்தும் இனி வங்கியின் மூலம் வழங்கப்பட உள்ளதால், ஒவ்வொருவரும் கட்டாயம் வங்கிக் கணக்கு துவங்க வேண்டும் என கனரா வங்கியின் சென்னை வட்டார வேளாண்மைப் பிரிவு விரிவாக்க அலுவலர் என். விக்னேஷ் கூறினார்.
நிதி ஒருங்கிணைப்புத் திட்டத்தின் கீழ் தத்தெடுக்கப்பட்டுள்ள அணங்காநல்லூர் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் 0 பேலன்ஸில் வங்கிக் கணக்கு துவங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், விக்னேஷ் பேசியது:
2000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, அங்குள்ளோரின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நிதி ஒருங்கிணைப்பு திட்டத்தின்கீழ் அனைவருக்கும் வங்கிக் கணக்கு துவக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டத்தில் வங்கி அதிகாரிகளே கிராமங்களைத் தேடி வந்து, பணம் மற்றும் பரிந்துரைக் கையெழுத்து கேட்காமல் வங்கிக் கணக்கு தொடங்கித் தருகிறோம்.
இக்கிராமங்களில் வங்கி நியமிக்கும் முகவர்களிடம் அனைத்து வங்கிச் சேவைகளையும் பெறலாம். இத்திட்டத்தில் சேர்பவர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி, வங்கி முகவரிடம் பணபரிமாற்றம் செய்யலாம். இரவு நேரங்களில் பணம் தேவைப்பட்டாலும் முகவரிடம் பணம் பெறலாம் என்றார் விக்னேஷ்.
நிகழ்ச்சிக்கு அணங்காநல்லூர் ஊராட்சித் தலைவர் கே. வெங்கடேசன் தலைமை தாங்கினார். வங்கியின் விவசாயப் பிரிவு விரிவாக்க அலுவலர் வி. அனுஷீலா வரவேற்றார்.
வங்கியின் உதவிப் பொது மேலாளர் மணகுளி, விவசாயப் பிரிவு முதுநிலை மேலாளர் ராஜகோபால், கிளை மேலாளர் எம். கார்த்திகேயன், ஒன்றியக் குழு உறுப்பினர் கே. மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.