வேலூர், ஜன. 8: கோயில் பணியாளர்கள் ஓய்வுபெற்ற பின்னரும் அதே கோயிலில் பணியாற்றலாம் என இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ப.ரா. சம்பத் தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத் துறை ஓய்வுபெற்றோர் சங்கத்தின் 2-வது மாநில மாநாடு வேலூர் மாவட்டம், ரத்தினகிரி பாலமுருகன் கோயில் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சம்பத் பேசியது:
திருப்பணிக்கு என்றும் ஓய்வில்லை. அதுபோல திருக்கோயில் பணியாளர்களுக்கு என்றுமே ஓய்வு கிடையாது.
கோயில் பணியாளர்கள் ஓய்வு பெற்ற பின்னரும் அவர்கள் விரும்பினால் தொடர்ந்து அதே கோயிலில் பணியாற்ற அனுமதிக்கிறோம்.
கோயில் பணி மன நிறைவான பணி. நீங்கள் செய்த புண்ணியத்தால்தான் உங்களுக்கு அறநிலையத் துறையில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.
33 ஆண்டுகளாக பல்வேறு பணிகளில் இருந்த எனக்கு தற்போது இந்து சமய அறநிலையத்துறை பணிதான் மனநிறைவை அளிக்கிறது.
கோயில் செயல் அலுவலர்கள் மக்களுக்கும் ஆண்டவனுக்கும் பாலமாக இருப்பவர்கள். கோயில் சொத்துகளை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு உங்களிடம் உள்ளது. சட்டதிட்டங்களில் சில மாற்றங்கள் கொண்டுவரும்போது கோயில் வளர்ச்சி நன்றாக இருக்கும் என்றார் சம்பத்.
முன்னதாக, விழா மலரை சம்பத் வெளியிட பாலமுருகனடிமை சுவாமிகள் பெற்றுக்கொண்டார்.
அறநிலையத் துறை இணை ஆணையர் கோ. பக்கிரிசாமி, சங்கத் தலைவர் சீதரன், பொதுச்செயலர் எஸ். துரைக்கண்ணு, வரவேற்புக் குழுத் தலைவர் எம். கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.