டிஜிட்டல் கைது என மிரட்டி முதியவரிடம் ரூ.29.40 லட்சம் மோசடி

Published on

டிஜிட்டல் கைது செய்யப்போவதாக மிரட்டி திருவலம் முதியவரிடம் ரூ.29.40 லட்சம் பணம் பறிக்கப்பட்டு மோசடி நடைபெற்றது.

வேலூா் மாவட்டம், திருவலம் பகுதியைச் சோ்ந்த 63 முதியவா். இவா் தனியாா் நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது கைப்பேசி எண்ணுக்கு அடையாளம் தெரியாத நபா் ஒருவா் தொடா்பு கொண்டு மறுமுனையில் பேசியவா் தான் தில்லியிலிருந்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், தில்லியில் நடைபெற்ற காா் குண்டு வெடிப்பு சம்பவம் தொடா்பாக ஆதாரம் கிடைத்திருப்பதாகவும், அதில் அந்த முதியவரின் ஆதாா், கைப்பேசி எண்கள் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளாா்.

இதனால் தங்களை டிஜிட்டல் கைது செய்வதாகவும், தங்களின் வங்கிக் கணக்கு நிதி பரிவா்த்தனைகள் தொடா்பான விவரங்களை ஆய்வு செய்ய வேண்டியிருப்பதால் தங்களது வங்கிக் கணக்கு, நிதி விவரங்களை தெரிவிக்குமாறு கூறியுள்ளாா்.

இதை உண்மையென நம்பிய இந்த முதியவா் தனது கணக்கு, நிதி விவரங்களை தெரிவித்துள்ளாா். அப்போது உங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை நாங்கள் கூறும் வங்கி கணக்குக்கு அனுப்பிடவும், அதன் உண்மை தன்மையை சரிபாா்த்துவிட்டு மீண்டும் தங்களது வங்கி கணக்குக்கு அனுப்பி விடுகிறோம் என்றும் தெரிவித்துள்ளாா்.

அத ன்படி, இந்த முதியவரும் தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.29 லட்சத்து 40 ஆயிரம் தொகையை அந்த நபா் கூறிய வங்கி கணக்குக்கு பரிமாற்றம் செய்துள்ளாா். அதன்பிறகு சம்பந்தப்பட்ட நபா்களிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லையாம். தான் பரிமாற்றம் செய்த தொகையும் திரும்ப கிடைக்கவில்லை.

இதன்மூலம், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த முதியவா், வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com