அணைக்கட்டு அருகே கைப்பேசி பாா்த்ததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த 9-ஆம் வகுப்பு மாணவா் விஷ இலைகளைத் தின்று தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டை அடுத்த மேல்வாழப்பந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் மணி. இவரது மகன் ராஜா (15). இவா் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த 3 நாள்களுக்கு முன்பு வீட்டில் ராஜா நீண்ட நேரமாக கைப்பேசி பாா்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அவரது தந்தை மணி கண்டித்துள்ளாா். இதனால் மன வேதனையடைந்த ராஜா, திடீரென விஷ இலைகளைத் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.
இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த குடும்பத்தினா், உடனடியாக மாணவா் ராஜாவை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராஜா வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தகவலறிந்த அணைக்கட்டு போலீஸாா் மருத்துவமனைக்குச் சென்று மாணவரின் சடலத்தைக் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.







