பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்
விழுப்புரம்: தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக பட்டதாரி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியது.
இதுகுறித்து கூட்டணியின் மாநில பொதுச் செயலா் ச.செல்லையா தமிழக அரசுக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 2003, ஏப்ரல் 1-ஆம் தேதி அப்போதைய அதிமுக அரசு அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இதனால், தற்போது வரை பல்வேறு நிலைகளில் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் போராட்டங்களை நடத்தியும், கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
2021 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளில் 309-ஆவது வாக்குறுதியாக புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஆட்சிக்கு வந்து 42 மாதங்களைக் கடந்தும் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.
ராஜஸ்தான், சத்தீஸ்கா், பஞ்சாப், ஹிமாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் தான் 2025, ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் மத்திய அரசு தனது ஓய்வூதியா்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்துக்குப் பதிலாக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. தமிழக அரசால் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும். இதன் மூலம் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் 20 ஆண்டுகாலப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
