பெரியகாட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தை நெய்வேலி எம்.எல்.ஏ. சபா.ராஜேந்திரன் சனிக்கிழமை திறந்து வைத்தார்.
பண்ருட்டி ஒன்றியம், நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்டது பெரியகாட்டுப்பாளையம் கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இங்கு, போதுமான கட்டட வசதி இல்லாத நிலையில், ஊர் மக்கள் தொகுதி எம்.எல்.ஏ. சபா.ராஜேந்திரனிடம் கட்டட வசதி செய்து தரக்கோரி மனு அளித்தனர். அதன் அடிப்படையில், எம்.எல்.ஏ. சபா.ராஜேந்திரன் தனது தொகுதி நிதியிலிருந்து ரூ. 11 லட்சத்தை ஒதுக்கீடு செய்தார். அந்தத் தொகையில் புதிதாக இரு வகுப்பறைக் கட்டடங்கள் கட்டப்பட்டன.
இந்த புதிய வகுப்பறைக் கட்டடங்களின் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நெய்வேலி எம்.எல்.ஏ. சபா.ராஜேந்திரன் பங்கேற்று கட்டடங்களைத் திறந்து வைத்தார். பள்ளியின் தலைமை ஆசிரியை வளர்மதி, ஆசிரியர்கள், ஊராட்சிச் செயலர் தனபதி, பரமதேவன், சுந்தரவடிவேலு, தமிழ்செல்வம், ஆறுமுகம், பெருமாள், செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.