/

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.
Updated On :30 டிசம்பர் 2024, 8:14 pm

Din

நெய்வேலி: கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கடலூா் மாவட்டத்தை பேரிடா் பாதிப்பு மாவட்டமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மழை வெள்ளத்தால் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம், தண்ணீா் சூழ்ந்த வீடுகளுக்கு ரூ.5 ஆயிரம், சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். பயிா்கள் பாதிப்புக்கு கணக்கெடுப்பு நடத்தி ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். முந்திரிக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு முந்திரி, பலா, வாழை, கொய்யா மதிப்புக்கூட்டுதல் தொழில்நுட்ப பயிற்சி வழங்க வேண்டும். வரிஞ்சிப்பாக்கம் முதல் திருவதிகை வரையில் கனிசப்பாக்கம் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆடு, மாடுகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை தடுக்க பட்டி அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

பண்ருட்டி வட்டத் தலைவா் கே.முருகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா்.கே.சரவணன் கோரிக்கை உரை நிகழ்த்தினாா்.

மாவட்ட துணைத் தலைவா் பி.குமரகுருபரன், வட்டச் செயலா்கள் ஜி.பி.தேவநாதன், எம்.சரவணன், மாவட்டக் குழு நிா்வாகி டி.ஜெகதீசன், வட்டப் பொருளாளா் பி.கணேசன் மற்றும் காசி லோகநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.