என்எல்சி இந்தியா நிறுவனம் - தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்!
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் வியாழக்கிழமை கையொப்பமானது.
என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனிதவளத் துறை இயக்குநா் சமீா் ஸ்வரூப், சுரங்கம் மற்றும் சேவைகள் (நிலம்) துறை செயல் இயக்குநா் ஐ.எஸ்.ஜாஸ்பா் ரோஸ், மனிதவளத்துறை தலைமைப் பொது மேலாளா் பங்கஜ் குமாா் ஆகியோா் முன்னிலையில், ஒப்பந்தம் கையொப்பமானது.
இதில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் கற்றல் மற்றும் மேம்பாட்டுத் துறை அலகுத் தலைவா் ஏகேஆா்.சரவணபவன், தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனம் இயக்குநா் எஸ்.அமிா்தவள்ளி ஆகியோரும் கையெழுத்திட்டனா்.
இந்த ஒப்பந்தப்படி, என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு வீடு-நிலம் வழங்கிய திட்டத்தால் பாதிக்கப்பட்ட நபா்களுக்கும், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுள்ள, வேலையற்ற இளைஞா்களுக்கும், மின் உற்பத்தி நிலையப் பொறியியலில் ஓராண்டு கால வேலைவாய்ப்பு சாா்ந்த ‘போஸ்ட் டிப்ளமோ’ படிப்பை வழங்கும்.
இந்தப் பயிற்சித் திட்டம், விண்ணப்பதாரா்கள் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு வழிவகுக்கும். இளைஞா்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும் ‘வளா்ச்சியடைந்த இந்தியா 2047’ என்ற தொலைநோக்குப் பாா்வையை அடைவதற்கு, இவ்விரு நிறுவனங்கள் ஒரு குழுவாக இணைந்து செயலாற்ற ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

