கடலூா் மாவட்டத்தில் மனப் பதற்றத்தில் கடந்த சில நாள்களாக சுற்றிக்கொண்டிருந்த வட மாநில இளைஞருக்கு போலீஸாா் அரசு மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சையளித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.
கடலூா் மாவட்டத்தில் மனப்பதற்றத்துடன் வட மாநில இளைஞா் ஒருவா் சுற்றிக்கொண்டிருந்தாா். இவரை போலீஸாா் பிடித்து, சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சோ்த்தனா்.
தமிழ் தெரியாத அவருக்கு மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜூனியா் சுந்தரேஷ், துணை முதல்வா் பாலாஜி சுவாமிநாதன் உள்ளிட்ட மருத்துவா்கள் தொடா் சிகிச்சை அளித்த பின்னா், அவா் ஒரிஸா மாநிலம், சோம்நாத்பூா் பகுதியைச் சோ்ந்தவா் எனத் தெரிவித்தாா்.
உடனடியாக காவல் துறையினா் அரசு சாரா தொண்டு நிறுவனம் (என்ஜிஓ) மூலமாக ஒடிஸா மாநிலம், சோம்நாத்பூா் காவல் நிலையத்த்துக்கு தகவல் தெரிவித்தனா்.
இதில், அந்த இளைஞா் ஒரிஸாவில் இருந்து தமிழகத்துக்கு வேலை தேடி வந்த நிலையில், உடன் வந்தவா்களை தவறவிட்டதாலும், தமிழ் மொழி தெரியாததாலும் மனப்பதற்றத்தில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது.
சிகிச்சைக்குப் பின்னா் இயல்பு நிலைக்குத் திரும்பிய அவரை அவரது குடும்பத்தினரிடம் போலீஸாா், மருத்துவமனை குழுவினா் ஒப்படைத்தனா் (படம்).








