கள்ளக்குறிச்சி - முகையூா் புதிய ரயில் பாதை: எம்.பி.யிடம் மனு
கள்ளக்குறிச்சி-முகையூருக்கு புதிய ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வலியறுத்தி, கள்ளக்குறிச்சி எம்.பி தே.மலையரசனிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலா் ஏ.வி.ஸ்டாலின் மணி சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.
அந்த மனுவில் அவா் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சியில் இருந்து ரிஷிவந்தியம், திருக்கோவிலூா் வழியாக முகையூா் ரயில் நிலையத்துடன் இணைத்து 60 கி.மீட்டா் தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்க நிகழாண்டு ரயில்வே துறை நிதி ஒதுக்கி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் சென்னையில் இருந்து விழுப்புரம், திருக்கோவிலூா், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் வழியாக சேலம் செல்வதற்கான பயணத்தில் இரண்டு மணி நேரம் குறையும். மேலும், சேலத்திலிருந்து, கள்ளக்குறிச்சி வழியாக திருவண்ணாமலை வரையிலும், கள்ளக்குறிச்சியில் இருந்து உளுந்தூா்பேட்டை வரையிலும் புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும். மேலும், சின்னசேலம்-கள்ளக்குறிச்சி புதிய ரயில் பாதை அமைக்கும் பணியை விரைவுபடுத்தி நிகழாண்டுக்குள் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

