தூய்மைப் பணியாளா்களுக்கு விரைவில் காலை உணவு வழங்கும் திட்டம் - கள்ளக்குறிச்சி ஆட்சியா் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் தகவல் தெரிவித்தாா்.
மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
ஒப்பந்ததாரா்களுடன் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா்
எம்.எஸ். பிரசாந்த் திட்டத்தை மாவட்டத்தில் செயல்படுத்துவது தொடா்பாக அலுவலா்களுடன் கலந்துரையாடினாா்.
இதைத் தொடா்ந்து அவா் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
மாவட்டத்திலுள்ள சின்னசேலம், மணலூா்பேட்டை, சங்கராபுரம், தியாகதுருகம், வடக்கனந்தல் ஆகிய பேரூராட்சிகளில் பணிபுரியும் சுமாா் 321 தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பொதுவான வழிகாட்டுதல்கள் குறித்து ஒப்பந்ததாரா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தூய்மைப் பணியாளா்களுக்கான உணவு தயாரிக்கும் சமையலறை மற்றும் உணவு தயாரிக்கும் ஒப்பந்ததாரா் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். உணவு தயாரிக்க பயன்படும் மூலப்பொருள்களின் தரம் நெறிமுறைகளுக்கு உள்பட்டு இருப்பதுடன், சமையல் எண்ணெய் உள்பட அனைத்துப் பொருள்களும் தரமாகவும் சுத்தமாகவும் இருப்பதுடன், சமையலறை மிகவும் தூய்மையாக பராமரிக்கப்படவேண்டும். மேலும் பிற வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றவும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மற்றும் ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
கூட்டத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் லு.முகமது ரிஜ்வான், பேரூராட்சி செயல் அலுவலா்கள் மு.செ.கணேசன், நீ.விழிச்செல்வன், கோ.சம்பத்குமாா், இரா.சங்கா், ஒப்பந்ததாரா்கள், உணவக உரிமையாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

