புதுச்சேரியில் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தாவிடில் போராட்டம் நடத்தப்படும் என்று நகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.
புதுச்சேரி மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து நீர்த்தேக்கத் தொட்டி ஊழியர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் நடந்தது. தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் முருகையன் முன்னிலை வகித்தார். பொருளாளர் நாகமுத்து மற்றும் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநிலத் தலைவர் தனசேகரன் கூறியதாவது:
அரசுத் துறைகளைப் போல நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தாவிட்டால் தொடர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.
பெருகி வரும் நீர்த்தேக்க தொட்டிகளுக்கு ஏற்ப ஆள்களை நியமனம் செய்து ஊழியர்களின் பணிச் சுமையை குறைக்க வேண்டும். நீர்த்தேக்க தொட்டித் ஊழியர்கள் பதவி உயர்வு பெறும் வகையில் நியமன விதியை திருத்தி பதவி உயர்வு அளிக்க வேண்டும், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் உருவாக்கம் செய்யும் வரி வசூலர் நிலை -3 பதவிக்கு மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்களையும் (டேங்க் ஆபரேட்டர்) சேர்த்து மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும், 2004ஆம் ஆண்டுக்கு முன்பு தினக் கூலியாக பணியாற்றி பின்னர், பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.