/

ஏஎப்டி ஆலை தொடர்பாக தொழிலாளர் துறை விசாரணை நடத்தும்: ஆளுநர் மாளிகை விளக்கம்

ஏஎப்டி பஞ்சாலையை மூடும் விவகாரம் தொடர்பாக மாநில அரசின் தொழிலாளர் துறை தீவிர விசாரணைக்குப் பின்னர் உரிய முடிவை எடுக்கும் என்று புதுவை ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :22 ஜனவரி 2020, 4:48 pm

DIN


புதுச்சேரி: ஏஎப்டி பஞ்சாலையை மூடும் விவகாரம் தொடர்பாக மாநில அரசின் தொழிலாளர் துறை தீவிர விசாரணைக்குப் பின்னர் உரிய முடிவை எடுக்கும் என்று புதுவை ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து ஆளுநர் மாளிகை சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

"புதுவையில் நஷ்டத்தில் இயங்கும் ஏஎப்டி பஞ்சாலை உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் குறித்து முடிவு எடுக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான விஜயன் குழுவை புதுவை அமைச்சரவை தன்னிச்சையாக  அறிவித்தது. இந்த ஒரு நபர் குழுவும் ஏஎப்டி பஞ்சாலையை மூட வேண்டும் என்று முடிவு எடுத்தது. மேலும், இந்த ஆலையின் நிர்வாகத்தில் இருந்த இயக்குநர்களும் விஜயன் குழு அறிக்கையை ஒப்புக்கொண்டு ஆலையை மூட சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஆலையை மூடும் முடிவுக்கு எதிராக விருப்ப ஓய்வூதிய திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இருப்பினும் இந்த கோப்பை ஆளுநர் தீவிரமாக ஆய்வு செய்து, ஆலையின் இயக்குநர்களின் முடிவுபடி நிதிச்சுமையில் இருக்கும் ஏஎப்டி ஆலையை மூடிவதே சரியென முடிவு எடுத்தார்.

ஆளுநர், அமைச்சரவை இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இந்த கோப்பை கடந்த ஆண்டு ஏப்ரலில் மத்திய அரசின் முடிவுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆலையை மூடுவதற்கான மத்திய அரசின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதற்கிடையே இந்த ஆலையை தொழில் தாவா சட்டம் பிரிவு 25-இன்படி மூடுவதற்காக மாநில அரசிடம் ஜன.21-ஆம் தேதி அனுமதி கேட்டுள்ளார்.

இந்த கோப்பு இப்போது மாநில அரசின் தொழிலாளர் துறையிடம் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆலை தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள், ஆலைக்கு கடன் கொடுத்த வங்கிகள் ஆகியோரிடம் தொழிலாளர் துறை தீவிர விசாரணை நடத்தி உரிய முடிவை எடுக்கும். பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் நலன் கருதி உரிய முடிவை எடுத்து மாநில அரசுக்கு தொழிலாளர் துறை அனுப்பிவைக்கும்.

ஏஎப்டி தொழிலாளர்களுக்கு லேஆப் ஊதியம் வழங்குவதற்கான மானிய நிதி தொடர்பான கோப்பு ஆளுநரால் கடந்த ஜன.9-ஆம் தேதியே ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது" எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.