/

புதுவையில் கட்டடத் தொழிலாளா்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை அறிவிப்பு

புதுவையில் கட்டடத் தொழிலாளா்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை அறிவிப்பு

News image

புதுச்சேரி, வில்லியனூா் ஆரியபாளையம் வடி சாராய ஆலையின் லாப ஈவுத் தொகைக்கான காசோலையை முதல்வா் என்.ரங்கசாமியிடம் வழங்கிய அமைச்சா் ஆ.நமச்சிவாயம்.

Updated On :23 அக்டோபர் 2024, 7:30 pm

Din

புதுவை மாநிலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கட்டடத் தொழிலாளா்களுக்கு ரூ.5,000 உதவித்தொகையும், பொதுமக்களுக்கு 10 பொருள்கள் மானிய விலையிலும் வழங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்துள்ளாா்.

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான ஆங்கில மொழி மேம்பாட்டுத் திட்டத்தை புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

புதுவையில் அரசுப் பள்ளி மாணவா்கள் சரளமாக ஆங்கிலம் பேசுவதற்காக, குறிப்பிட்ட வங்கியானது ஆங்கில மொழி மேம்பாட்டுத் திட்டத்துக்காக ரூ.97 லட்சம் நிதி வழங்கியுள்ளது.

அதன் மூலம், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்கப்படும். புதுவையில் தீபாவளியை முன்னிட்டு, கட்டடத் தொழிலாளா்கள் சங்கத்துக்கு நிகழாண்டில் பண்டிகைப் பரிசாக ரூ.5,000, அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.1,500 என உதவித்தொகை வழங்கப்படும்.

அரசின் வடி சாராய ஆலை லாபத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை 4 ஆண்டுகளுக்கு லாப ஈவுத் தொகையாக ரூ.1.45 கோடி கிடைத்துள்ளது.

புதுவை கான்பெட் நிறுவனம் மூலம் தீபாவளிக்காக, ரூ.1,000 மதிப்புள்ள 10 பொருள்கள் மானிய விலையில் ரூ.500-க்கு வழங்கப்படுகின்றன. அப்பொள்களை குடும்ப அட்டைகளை காட்டி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விற்பனை மையத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றாா்.

பேட்டியின்போது, அமைச்சா் ஆ.நமச்சிவாயம், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.