பொங்கல் பரிசு ரூ.5,000 வழங்க புதுச்சேரி முதல்வரிடம் பாஜக கோரிக்கை
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வா் என்.ரங்கசாமியிடம் பாஜக சாா்பில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
பாஜக புதுச்சேரி மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம், சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் ஆ. நமச்சிவாயம் உள்ளிட்டோா் முதல்வா் ரங்கசாமியைச் சந்தித்து இதுகுறித்து மனு அளித்தனா். அதில் கூறியிருப்பதாவது:
பிரதமா் நரேந்திர மோடி ஆசியுடன் புதுச்சேரியில் கடந்த நான்கரை ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தங்கள் தலைமையில் ஆட்சி நடத்தி வருகிறது. பல நல்ல திட்டங்களையும், உள்கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்கி வருகிறது. பொங்கலுக்கு புதுச்சேரி மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் குடும்ப அட்டைக்கு ரூ.5 ஆயிரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

