மீண்டும் பணி வழங்கக் கோரி தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் முன்னேற்றச் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவர் மதிவாணன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜெயபால் வரவேற்றார்.
தமிழகத்தில் கடந்த 1989-90ஆம் ஆண்டுகளில் மக்கள் நலப் பணியாளர்கள் பணியில் 13,500 பேர் அமர்த்தப்பட்டனர். அதன் பிறகு மூன்று முறை பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால், அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றம் மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டது. ஆனால், இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதனை திரும்பப் பெற்று, மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
கோலியனூர் ஒன்றிய நிர்வாகி ரமேஷ், காணை ஒன்றிய நிர்வாகி ஆதிநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் கருணாநிதி நன்றி கூறினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க அவர்கள் அங்கிருந்து 50-க்கும் மேற்பட்டோர் புறப்பட்டுச் சென்றனர். அவர்களை போலீஸார், பெருந்திட்ட வளாக நுழைவாயிலில் தடுத்து நிறுத்தி சிலரை மட்டும் மனு கொடுக்க அனுமதித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.