கல்லூரி நேரத்தில் போதிய அரசுப் பேருந்துகளை இயக்கக் கோரி, உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் நகர்ப் பேருந்துகளை சிறைப்பிடித்து மாணவ, மாணவிகள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பாண்டூர், செங்குறிச்சி, பாதூர், வெள்ளையூர், குமாரமங்கலம், எலவனாசூர்கோட்டை உள்ளிட்ட கிராமங்களிலிருந்து மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் இலவச பேருந்துப் பயண அட்டை மூலம் விருத்தாசலம் அரசுக் கல்லூரிக்கு சென்று வந்தனர். அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட 3 பேருந்துகளில் ஒரு பேருந்தை உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை நிர்வாகம் நிறுத்திவிட்டதாக தெரிகிறது. இதனால் பாதிப்புக்குள்ளான மாணவர்கள் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் 2 நகர்ப்பேருந்துகளை சிறைபிடித்து கூடுதலாக பேருந்துகளை இயக்கக்கோரி மறியலில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை போலீஸார் பேருந்து நிலையத்துக்கு விரைந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கூடுதலாக பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில், மாணவ, மாணவிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த மறியல் போராட்டத்தால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.