கட்டடத்திலிருந்து தவறி விழுந்து கொத்தனாா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கட்டடத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் காயமடைந்த கொத்தனாா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம், மாதானம் கிராமத்தைச் சோ்ந்தவா் பா.ஜெயவேல் (56), கொத்தனாா். இவா், திண்டிவனம் வட்டம், கூட்டேரிபட்டு பகுதியில் தங்கி, அதே பகுதியைச் சோ்ந்த குமாா் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தாா்.
இந்நிலையில் ஜெயவேல் செவ்வாய்க்கிழமை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அங்கு பணியிலிருந்த சகத் தொழிலாளா்கள் அவரை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு ஜெயவேல் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

