"படை வீரர்களை கெளரவிப்பது அவசியம்'
நாட்டுக்காக உழைத்த படை வீரர்களைக் கெளரவிப்பது அவசியம் என்று, கப்பல் படை துணை அட்மிரல் (ஓய்வு) பி.ஜே.ஜேக்கப் கேட்டுக் கொண்டார்.
நாட்டுக்காக உழைத்த படை வீரர்களைக் கெளரவிப்பது அவசியம் என்று, கப்பல் படை துணை அட்மிரல் (ஓய்வு) பி.ஜே.ஜேக்கப் கேட்டுக் கொண்டார்.
பெங்களூருவில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், இந்திய கப்பற்படை துணை அட்மிரல் மறைந்த நீலகண்ட கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்று நூலான ஒரு கப்பலோட்டியின் கதை என்ற ஆங்கில நூலை வெளியிட்டு அவர் பேசியது:
நமது நாடு கண்ட மிகச் சிறந்த கடற்படை வீரர்களில் ஒருவர் துணை அட்மிரல் நீலகண்ட கிருஷ்ணன். கப்பற்படையில் 40 ஆண்டுகள் பணியாற்றிய போது பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் காட்டினார்.
Advertisement
Advertisement
கடந்த 1939 முதல் நடைபெற்ற இரண்டாம் உலகப்போர், 1971-இல் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போரின் போது மகத்துவம் வாய்ந்த பங்களிப்பை அளித்தார். இந்திய- பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தானின் காசி என்ற நீர்மூழ்கிக் கப்பலை விசாகப்பட்டி
னத்தில் தகர்த்து வீழ்த்தியவர் நீலகண்ட கிருஷ்ணன்.
எந்த வேலையும் முழு முயற்சியுடன் செய்து முடிப்பதில் திறமை வாய்ந்தவர் கிருஷ்ணன். இதேபோல, கோவா, டாமன் பகுதியை போர்த்துகீசியர்களிடம் இருந்து மீட்பதற்காக 1961-இல் நடைபெற்ற போரிலும் முக்கிய பங்காற்றியவர் கிருஷ்ணன்.
அப்போது, நமது நாட்டின் நீர்வழிப் பாதைகளை பாதுகாப்பதில் அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட பல வீரர்கள் இருந்தனர். நாட்டின் பாதுகாப்புக்காக எந்தவொரு தியாகத்திற்கும் அவர்கள் தயாராக இருந்தனர். நாட்டுக்காக உழைத்த படை வீரர்களை கெளரவிக்க நாம் எப்போதும் தவறக் கூடாது.
அண்மைக் காலமாக திறன் குன்றிருந்த கடற் படையின் திறன் தற்போது அதிகரித்து வருகிறது மகிழ்ச்சியளிக்கிறது. உலகில் யாராலும் வீழ்த்த முடியாதபடி இந்தியா தனது முப்படைகளைக் கட்டமைத்துள்ளது என்றார்.
விழாவில் ரியர் அட்மிரல் ஜி.சி.தடானி, தொழிலதிபர் எஸ்.சடக்ஷரி, அருண்கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.