எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் சொந்த பலத்தில் ம.ஜ.த. ஆட்சியைக் கைப்பற்றும் என்று அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவெ கெளடா தெரிவித்தார்.
பெல்லாரியில் அவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: -
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் அனைத்து தொகுதியிலும் ம.ஜ.த. வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம். சொந்த பலத்திலேயே ஆட்சியை பிடிப்போம் என நம்பிக்கை உள்ளது. இதனை பகல் கனவு என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்தாலும், அதைப் பற்றி கவலைப்பட மாட்டோம்.
கர்நாடகத்தை தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜகவிடமிருந்து மீட்க வேண்டும். மாநில வளர்ச்சியில் அக்கறை உள்ள வாக்காளர்கள் ம.ஜ.த.வுக்கு வாக்களிப்பார்கள். காங்கிரஸ், பாஜக கட்சியினர் ம.ஜ.த.வின் செல்வாக்கை குறைத்து மதிப்பிட்டு வருகின்றனர்.
ஊழல் கட்சிகளான அந்த இரு கட்சிகளையும் புறக்கணிக்க கர்நாடக மக்கள் முடிவு செய்துள்ளனர். குஜராத் மாநிலத் தேர்தல் முடிவுக்குப் பிறகு தேசிய அளவில் அரசியலில் மாற்றம் நிகழ உள்ளது.
பெங்களூரு மட்டுமின்றி, மாநில அளவில் இந்திரா உணவு மையங்களைத் தொடங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் ஏழைகளுக்கு எந்தப் பயனும் இல்லை. காலையில் நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் இந்திரா உணவகத்தில் காலை சிற்றுண்டியை முடித்துவிட்டுச் செல்கின்றனர். இந்திரா உணவகம் அவர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக உள்ளது என்றார் அவர்.